வெற்றிபெற்ற முஃமின்களைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
தங்கள் மனைவியர்களையும் அவர்களின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அனுபவிப்பதைத் )தவிர (ஏனையவைகளை விட்டும் )அவர்கள் தங்களின் மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்பவர்கள்.இவர்கள் பழிக்கப்பட்டவர்கள் அல்ல. அதற்குப் பின்னரும் யார் (வேறு வழிகளை) தேடிக்கொள்கிறார்களோ அவர்கள் வரம்புமீறியவர்கள். (அல் முஃமினூன்)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆதத்தின் மகனுக்கு விபச்சாரத்தில் அவனுக்குரிய பங்கை அல்லாஹ் அவன் மீது எழுதிவிட்டான். அதை அடைந்தே தீருவான் . கண்ணின் விபச்சாரம் பார்வை, நாவின் விபச்சாரம் பேச்சு, மனம் கற்பனை பண்ணுகிறது.ஆசிக்கிறது. மர்மஸ்தானம் அது அனைத்தையும் உண்மைப்படுத்துகிறது. மேலும் பொய்யாக்கி விடுகிறது.
இவ்விரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் நோக்குவோம்.
தனக்கு ஏற்படக்கூடிய காம ஆசையை தன் மனைவி தன் அடிமைப்பெண்ணின் மூலமே மூமின்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும் , அதற்கப்பால் வரம்பு மீறி வேறு எந்த வழிகளையும் தேடக்கூடாது என்பதை மேற்கண்ட வசனம் உணர்த்துகிறது. எனவே வரம்பு மீறிய செயல்களில் உள்ளதாகவே சுய இன்பம் பெறுவதும் புலனாகிறது. நேரடியாக சுட்; டிக்காட்டப்படாவிட்டாலும் அனுமதிக்கப்பட்ட இரண்டையும் தவிரவுள்ள அனைத்தும் வரம்புமீறிய காரியமே.
இவ்வாறே அனுமதியற்றதை காமத்தோடு பார்ப்பதும் பேசுவதும் மனதால் கற்பனை செய்வதும் விபச்சாரம் என்பதையும் நபிமொழி எடுத்துச்சொல்கிறது.
சுய இன்பம் அடைபவர் இவைகளையும் செய்வதோடு அதற்குமப்பால் மற்றுமொரு நபிமொழியையும் மீறிவிடுகிறார்
அதாவது நபி (ஸல்) கூறினார்கள். வாலிப கூட்டத்தினரே உங்களில் திருமணம் செய்ய சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும். அதுவே மிகவும் பார்வையை தாழ்த்தக்கூடியதும் மர்மஸ்தானத்தை பாதுகாக்கக்கூடியதுமாகும். யார் சக்திபெறவில்லையோ அவர் நோன்பை பற்றிப்பிடித்துக் கொள்ளட்டும். அதுவே அவருக்கு கட்டுப்பாடாகும். ( புகாரி)
இந்த ஹதீஸில் காம ஆசை திருமணம் மூலம் நிறைவேறாவிட்டால் நோன்பு பிடித்து ஆசையைக் கட்டுப்படுத்த வழிகாட்டப்பட்டுள்ளதே தவிர சுய இன்பத்திற்கு வழிகாட்டப்படவில்லை.
இவைகள்தான் மூமின்களுக்கு இஸ்லாம் காட்டுகின்ற அழகான வழியாகும். இதற்கப்பால் யார் எந்த வழியில் ஆசையைத் தீர்த்தாலும் வரம்பு மீறிய பாவமான செயலாகும்.
இந்த யதார்தத்தை புரியாத சிலர் சுய இன்பம் நேரடியாக தடுக்கப்படவில்லை என்று கூறிக் கொண்டு அதற்கு அனுமதி வழங்குவது மிகத்தவறான வாதமாகும்.
இதனால் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் சுய இன்பம் பெற்று வரம்புமீறுவதற்கு வழிவகுத்து விடுகின்றனர்.
இதற்குமப்பால் சிலர் நோன்புடன் சுய இன்பம் பெற்றால் நோன்பு முறியாது என்றும் கூறுகின்றார்களாம். அல்லாஹ் பாதுகாப்பானாக. இவர்களின் இந்தக்கூற்று நோன்புடன் மனைவியின் பின் துவாரத்தில் ஆசையை தீர்த்தால் நோன்பு முறியாது எனக் கூறுவதைப் போன்றுள்ளது. ஏனெனில் இந்த விடயமும் ஹதீதில் நேரடியாக தடுக்கப்படவில்லை என்று அவர்களின் வாதப்படி கூறவேண்டி ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக
அன்பின் சகோதரர்களே இதுபோன்ற வரம்புமீறும் காரியங்களுக்கு மேலோட்டமாக தீர்ப்பு வழங்குவோரின் தீர்ப்புகளில் மிகக் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.